காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் பரபரப்பு
காவல்துறையினர் அனுமதி வழங்காததால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சரின் மகன் வாகனம் மோதி 2 விவசாயிகள் இறந்த சம்பவத்தை கண்டித்தும், விவசாயிகள் குடும்பத்தை பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, காவல்துறையினர் அனுமதி வழங்காததால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பிஎல்ஏ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்து சாலையின் நடுவே நின்று கொண்டனர். காவல்துறையினர் எப்படி இவர்களை அப்புறப்படுத்துவது என தெரியாமல் திகைத்து நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.