வாக்களிப்பின் அவசியம்- ஆட்சியர்,எஸ்.பி ஓடி விழிப்புணர்வு
தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுக்கோட்டையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, துணை ராணுவப் படையினர் மாணவ-மாணவிகள் என ஒருசேர சாலையில் ஓடிய நிகழ்வு காண்போரை கவர்ந்தது.
சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை நடத்திடவும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு பொது வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், 92 துணை ராணுவ படையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். மாணவர்களோடு இணைந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்பி., பாலாஜி சரவணன் உள்ளிட்டோரும் ஓடிய நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.இந்த மராத்தான் ஓட்டம் பழைய பேருந்து நிலையம் கீழராஜவீதி, பிருந்தாவனம்,வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி,புதிய பேருந்து நிலையம் சாலை வழியாக சென்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.