நாமக்கல் தொகுதியில் மீண்டும் கொமதேக போட்டி : தொண்டர்கள் உற்சாகம்
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் மீண்டும் கொமதேக போட்டியிடுவதையடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
HIGHLIGHTS
திமுக கூட்டணியில், நாமக்கல் மக்களவை தொகுதியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது என உறுதி செய்யப்பட்டதால், நாமக்கல் பகுதி கொமதேக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதன் முறையாக திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும், ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், நாமக்கல் தொகுதியில் திமுக அணியில் கொமதேக வேட்பாளர் சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 6.21 லட்சம். அவதை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டிஎல்எஸ் காளியப்பன் பெற்ற வாக்குகள் 3.61 லட்சம். சுமார் 2.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கொமதேக வேட்பாளர் சின்ராஜ் வெற்றிபெற்று, கடந்த 5 ஆண்டுகளாக எம்.பியாக பணியாற்றினார்.
சமீபத்தில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், நான் கடந்த 5 ஆண்டுகளாக லஞ்சம் வாங்காமல் பணியாற்றி, ஏராளமான திட்டங்களை நாமக்கல் தொகுதிக்கு மட்டுமல்லாது, கொங்கு மண்டலம் முழுமைக்கும் செய்துள்ளேன். மன நிறைவுடன் நான் விடைபெறுகிறேன். இந்த தேர்தலில் போட்டியிடாமல் வேறு நபர்களுக்க வாய்ப்பு கொடுத்து நான் போட்டியில் இருந்து விலகுகிறேன், அவர் என்னைவிட திறமையாக செயல்பட்டால் பாராட்டுவேன் என கூறினார்.
இந்த நிலையில் மீண்டும் நாமக்கல் மக்களவை தொகுதி, கொமதேவிற்கு ஒதுக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே அதிமுக வேட்பாளர் உறுதி செய்யப்படாமல், அக்கட்சியை சேர்ந்த தொழில் அதிபர் நாமக்கல் மக்களவைதொகுதியில் மறைமுகமாக ஃபிளக்ஸ் போர்டுகள், சென்டர் மீடியன்கள், பத்திரிக்கைகள் போன்றவற்றில் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளார். இந்த நிலையில் கொமதேக விரைவில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடும் என்று தெரிகிறது.
மீண்டும் ஏகேபி சின்ராஜ் போட்டியிடுவாரா ?, நாமக்கல்லைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கிடைக்குமா ? அல்லது வெளியூரைச் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.