நாமக்கல் அருகே சாய தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நாமக்கல் அருகே சாய தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள கல்யாணி கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நெசவு மற்றும் சாய தொழிற்சாலை அமைக்க அனுமதி கேட்டிருந்தது. இதனிடையே பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து மாசு கட்டுபாட்டு வாரியம் தொழிற்சாலைக்கு தடையில்லா சான்று வழங்க முன்வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி நாமக்கல் தாசில்தார் திருமுருகன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சாய தொழிற்சாலை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து 15 நாட்களுக்குள் ஊர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கல்யாணியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாய தொழிற்சாலை நிலத்தடி நீரை மாசுபடுத்தும். எனவே, அதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது என பெரும்பாலானோர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து கல்யாணி பஞ்சாயத்தில் சாய தொழிற்சாலை அமைக்கக்கூடாது, அதற்கு ஊராட்சியில் அனுமதியும் வழங்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாமக்கல் தாசில்தார் திருமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.