நாமக்கல்லில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் ஆரம்பம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். பறவை காய்ச்சலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது.
HIGHLIGHTS
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்பின் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தவும் ஆய்வு மேற்கொள்ளவும் நாமக்கல் மாவட்டத்தில் 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் கால்நடை மருத்துவர் மற்றும் உதவி மருத்துவர் ஆகியோர் இடம் பெறுவார்கள். கோழிகளின் தன்மைகளை ஒரு வாரத்திற்குள் ஆராய்ந்து அறிக்கை தருமாறு இந்த குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிகள் மற்றும் பறவைகள் அதிகளவு இறந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
கேரளாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டைகள் எடுத்து செல்லப்பட்டு அந்த அட்டைகள் திருப்பி அந்தந்த கோழிப்பண்ணைகளுக்கு திரும்பி எடுத்து வருவதால் அட்டைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் காய வைக்க கோழிப்பண்ணையாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். மேலும் கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
வனப்பறவைகள் மூலம் பரவக்கூடும் என்பதால் அதனையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஆனால் நாமக்கல் மாவட்டத்திற்குள் வனப் பறவைகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை, பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என தெரிவித்தார்.