பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் காரீப் திட்ட செயலாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காரீப் பருவ மக்காச் சோளம், இராகி, சோளம், துவரை, உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டு காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு வருகிற 31ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு அதிகபட்ச இழப்பீடாக இராகி பயிருக்கு ரூ.9775ம் பச்சைபயறு, துவரை மற்றும் உளுந்து ரூ.13265ம், நிலக்கடலை ரூ.19650-ம், மக்காச்சோளம் ரூ.22435-ம், பருத்திக்கு ரூ.11537.60ம், சோளம் ரூ.7100ம் வழங்கப்படும். இத்திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளுக்கும் பிர்கா வாரியாக சோதனை அறுவடை செய்து இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இழப்பின் போது காப்பீட்டு தொகை தவறாமல் கிடைக்கும்.
விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி உளுந்து, துவரை மற்றும் பச்சை பயிறு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.265.30ம், இராகி பயிறுக்கு ரூ.195.49ம், நிலக்கடலை பயிறுக்கு ரூ.393ம், மக்காச்சோளப் பயிறுக்கு ரூ.142- ம், பருத்தி பயிறுக்கு ரூ.576.80-ம், சோளம் பயிருக்கு ரூ.265.30-ம் செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை மக்கள் கணினி மையத்திற்கு சென்று பதிவேற்றம் செய்து பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.