மண் வளம் பெருக பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
மண் வளம் பெருக்க பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யுமாறு, கிருஷ்ணகிரி வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி கோடை உழவு செய்யும்போது, மழைநீர் வழிந்து ஓடி விடாமல் மண்ணிலேயே நிறுத்தி வைக்க முடியும். மண்ணின் வளம் பெருக்கிட பாசன வசதி உள்ள நிலங்களில் தக்கை பூண்டு சாகுபடி செய்யலாம்.
போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும் போது ஏக்கருக்கு 16 கிலோ என்ற வீதத்தில் விதைத்து 30 முதல் 35 நாட்கள் கழித்து பாதியளவு செடிகள் பூக்கள் பூக்கும் தருணத்தில் மடக்கி சேற்று உழவு செய்ய வேண்டும்.
கோடை பருவத்தில் விதைக்கப்படும் பசுந்தாள் பயிர் மூலம் நிலத்துக்கு தேவையான 20 சதவீத தழைச்சத்து இயற்கையாகவே அதிகரித்து, அடுத்த வரும் பயிருக்கு எளிதில் கிடைக்கும். மேலும், மூடு பயிராக வளர்ந்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. பசுந்தாள் மக்கும் போது வெளிப்படும் கந்தக அமிலம் மணிச்சத்து உரத்தினை கரைத்து பயிருக்கு கிடைக்க வழிகோலுகிறது.
களர் மற்றும் உவர் நிலங்களில் நன்கு வளர்ந்து நிலத்தை சீராக்கும் தன்மைக்கொண்டது. மண்ணின் வளத்தினை பெருக்கி ரசாயன உரத்தேவையைக் குறைத்து சாகுபடி செலவை குறைப்பதால் விவசாயிகள் தக்கைப்பூண்டு, சணப்பை முதலான பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மண்வளம் காத்து பயன்பெற வேண்டுமென்று, வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.