ஆயுத பூஜை விழா: பூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
ஆயுத பூஜை விழாவை ஒட்டி பூஜை பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் கூடியதால் கரூர் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி சிறிய கடைகள் முதல் அனைத்து வகையான பெரும் தொழிற்சாலைகள் வரை ஆயுத பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதால், கரூரில் பூஜை பொருள்கள் விற்பனை களை கட்டியது.
காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை, பொரி, கடலை, கொய்யாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள், சிறிய வாழை கன்றுகள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. வாழை கன்றுகள் ரூ.50 முதல் ரூ.100 வரையும், வாழை இலை 10 இலைகள் கொண்ட அடுக்கு ரூ.50 வரையிலும் விற்கப்பட்டது. மேலும், கொய்யாப்பழம் கிலோ ரூ.80-க்கும், ஆப்பிள் கிலோ ரூ.150-க்கும், ஆரஞ்சு ரூ. 80க்கும், பூசணி ஒன்று ரூ.50 முதல் ரூ. 100 வரை விற்கப்பட்டது.
காமராஜ் தினசரி மார்க்கெட், பேருந்து நிலைய காய்கறி சந்தை, உழவர் சந்தை பகுதிகளில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் தோன்றி வாழை கன்றுகள் மற்றும் பழங்கள் விற்கப்பட்டன. ஆயுத பூஜை ஒட்டி காமராஜர் சாலையில் பூஜை பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மேலும், ஆயுத பூஜை தினத்தன்று சரஸ்வதி பூஜையும் நடைபெறுவதால் சரஸ்வதி சுவாமி படங்கள் ரூ.250 தொடங்கி ரூ.3000 வரை விற்பனை மும்முரமாக நடைபெற்றது.