நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்
அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை திடீர் ஆய்வு செய்து சாலையோர கடையில் டீ அருந்தினார்
HIGHLIGHTS
கரூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூய்மை பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் அண்மையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, கரூர் மாவட்டத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில், முதல் கட்டமாக கரூரில் உள்ள 48வார்டுகளிலும் சிறப்புப் தூய்மை பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதற்காக நகராட்சி முழுவதும் 800 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
150 வாகனங்கள் மூலம் குப்பைகளை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை எதிர்பாராம் பெய்த கனமழையால் கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல்வேறு பகுதிகளில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தகவலறிந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 25வது வார்டுக்குட்பட்ட செங்குந்தபுரம், ஒன்று முதல் ஆறுவரை உள்ள குறுக்கு வீதிகள் காமாட்சி அம்மன், கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வீதியில் நடந்து வந்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளை சிறப்பு கவனம் எடுத்து நிறைவேற்று தருவோம் என அமைச்சர் உறுதியளித்தார்.
அப்போது துப்புரவு பணியாளர்களிடம் கழிவு நீர் கால்வாய்கள் அடைக்கப்பட்டு இருந்தால் அதனை அப்புறப்படுத்தவும், புதிய கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கு அதிகாரிகளிடம் திட்ட மதிப்பீடு செய்து தரக் கோரியும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் சேதமடைந்த நகர சாலைகளை சீர் அமைப்பதற்கான பணிகளை துரித கதியில் மேற்கொள்ளவும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். திடீர் ஆய்வு மேற் கொண்ட பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி, சாலையோரம் இருந்த கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ அருந்தியதை அந்த வழியாகச் சென்றவர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.