கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் வார்டு அமைக்க தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கோரிக்கை
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க வேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
HIGHLIGHTS
கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், லீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனா தாக்கத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆபத்து நேரத்தில் மக்களை பாதுகாப்பது அரசின் தலையாய கடமை அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அவர்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.
இதற்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துமனையில் பொதுமக்களின் நலன் கருதி கொரோனா வார்டினை காலதாமதமின்றி உடனடியாக அமைத்து மக்களின் துயர் களைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு உரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.