குமரியில் தேவாலய குருசடியை உடைத்து கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
குமரியில் தேவாலய குருசடியை உடைத்து கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சியில் சொரூபத்தின் கை விரல் உடைக்கப்பட்டதால் பரப்பரப்பு.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடம் அருகே சகாயநகர் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் தேவாலயம்.
இந்த ஆலயத்தின் வளாகத்தில் அந்தோணியார் குருசடி அமைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காலையில் திறக்கப்பட்டு இரவு நேரத்தில் அடைக்கப்பட்டு வருகிறது. குருசடியின் முகப்பில் இடது பக்கத்தில் அன்னை வேளாங்கண்ணி சொரூபமும் வலது பக்கத்தில் தேவசகாயம்பிள்ளை சொரூபமும் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று அப்பகுதியை சார்ந்த சிலர் அந்தோனியார் குருசடிக்கு சென்று வணங்குவதற்கு சென்றபோது முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி அமைந்துள்ள கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வேளாங்கண்ணியின் கையில் விரலின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள், இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி ஆய்வாளர் மீனா மற்றும் உதவி ஆய்வாளர் மாரிச்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அன்னை வேளாங்கண்ணியின் கழுத்தில் தங்க நிறத்திலான பாசி போடப்பட்டு இருந்ததால் மர்ம நபர் இந்த மாலையானது தங்கமாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கண்ணாடியை உடைத்து மாலையை திருட முயற்சித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கைரேகை நிபுணர்கள் துணை கொண்டும் கண்காணிப்பு காமிராவையும் சோதனை செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.