நீண்ட நாட்களுக்குப் பின் குமரியில் அனுமதி; சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்
கடற்கரை, குதிரை சவாரி, சொகுசு கப்பல் பயணம் என கன்னியாகுமரிக்கு வந்த பொதுமக்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
HIGHLIGHTS
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்கு முகம் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் கடந்த வருடம் மே 10 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
இந்நிலையில் தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று முதல் கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைகள், சூரிய உதய காட்சிகள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர், மேலும் குதிரை சவாரி செய்தும் குடும்பத்தினருடன் இயற்கை அழகை ரசித்தனர்.
இதனிடையே கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரிதும் விரும்பும் கடலின் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான படகு போக்குவரத்தும் இன்று தொடங்கியதால் சொகுசு படகில் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.