"கொரோனாவால் சாவதை விட வறுமையால் செத்து விடுவோம்" -வியாபாரிகள் வருத்தம்
கொரோனா விதிகளை மீறி செயல்பட்டு வந்த கிராம காய்கறி சந்தையை அகற்றியதால் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. குறிப்பாக காய்கறி சந்தைகள் வணிக வளாகங்கள் திரையரங்குகள் இவைகள் அனைத்தும் மூடி மறு உத்தரவு வரை திறக்கக்கூடாது என அறிவுறுத்தியது. இந்நிலையில் காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வார சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக இவைகளை நடத்தக்கூடாது என அப்பகுதி ஊராட்சி செயலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த திருபருத்திகுன்றம் பகுதியில் மாலை 3 மணியிலிருந்து காய்கறி வியாபாரிகள் குவிய தொடங்கி சந்தை வியாபாரம் நடந்து கொண்டிருப்பதாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறைக்கு அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த காவலர்கள் கடைகளை அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பிலும் கடும் வாக்குவாதம் நிலவியது. அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாலுசெட்டி காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் வியாபாரிகளிடம் சந்தை கூடுவது சட்டவிரோதமானது என கூறி அனைவரையும் கலைந்து செல்ல கூறினர்.
வியாபாரிகள் ஒன்று கூடி இருவரிடம் தங்கள் வாழ்வாதாரம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால் தாங்கள் கொரோனாவில் சாவதை விட பசியால் வறுமையால் இருந்துவிடுவது மேல் என எண்ணத் தோன்றுவதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இருப்பினும் காவல் துறை வருவாய்த் துறையின் கட்டாயத்தால் அனைவரும் காலி செய்து சென்றனர்.