வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்
அத்திவரதர் திருக்கோயில் என உலக புகழ் பெற்ற ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
HIGHLIGHTS
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பெருந்தேவித்தாயார் சமேத தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசித் திருவிழா, வரும் 13 ஆம் தேதி அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும்,40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா சிறப்புக்கும் உரியது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பெருந்தேவித்தாயார் சமேத தேவராஜசுவாமி திருக்கோயில்.ஆண்டு தோறும் வைகாசித்திருவிழா சிறப்பாக நடந்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்விழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பெருமாள் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வரவுள்ளார்.
விழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு அலங்காரங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளார்.பெருமாள் கருடசேவைக் காட்சி வரும் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வரும் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பெருமாள் ஆலயத்தில் இருந்து திருத்தேருக்கு எழுந்தருளி அதிகாலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் 21 ஆம் தேதி தீர்த்தவாரியும் மறுநாள் 22 ஆம் தேதி இரவு, கொடியிறக்கத்துடனும் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை இண ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் ஆ.முத்து ரத்தினவேலு, நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன், கோயில் மணியம் கிருஷ்ணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரரர்கள் செய்து வருகின்றனர்.