நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் தேர்வு ஆரம்பம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் தேர்வு துவங்கியது.
HIGHLIGHTS
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்தும் கட்சி சார்பிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப வேட்புமனு பெறப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பவளவிழா மாளிகையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி , உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் இன்று தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம். சேகர், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வார்டு வாரியாக நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
இதில் வேட்பாளரிடம், வார்டுகளில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை, கழக பொறுப்பு, ஆற்றிய பணிகள், செய்யப்பட்ட நலதிட்ட உதவிகள் உள்ளிட்டவைகளை கேட்டறிந்து குறிப்பெடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாலை மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் மதுராந்தகம், இடைக்கழிநாடு, அச்சரப்பாக்கம், கருங்குழி ஆகிய பகுதிகளுக்கான நகர்புற உள்ளாட்சி வேட்பாளர் தேர்வு நடைபெற உள்ளது.