காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் பறக்கும் படையினரால் ரூ.12லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டத்தின் நுழைவு வாயிலிலேயே வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவில் கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் வட்டாட்சியர் ரமணி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ4 லட்சத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கண்காணிப்பு குழுவினர், வட்டாட்சியர் அகிலா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட. 3 லட்சத்து 77ஆயிரத்து 100 ருபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பணம் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதிகாலையில் இருந்து நடைபெற்ற வாகன சோதனையில் மொத்தம் 12 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பட்டு சேலை எடுக்க அதிக அளவில் காஞ்சிபுரம் வருகை தருபவர்கள் போதிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுச்சேலை கடை உரிமையாளர்கள் பணம் கொண்டுவந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு அதிக தள்ளுபடி வழங்குவதால் பணம் கொண்டு வந்து வாங்குவதையே விரும்புகின்றனர். டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை தவிர்க்கும்படி பட்டுசேலை விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.