பேரூராட்சி தலைவர் பதவியை பெற்று தரக்கோரி காங்கிரஸ் கவுன்சிலர் முதல்வரிடம் மனு
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சித் தலைவரை பதவியிலிருந்து நீக்கி காங்கிரஸ் கட்சிக்கு தர கோரி திமுக தலைவரிடம் மனு அளித்தனர்
HIGHLIGHTS
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வெற்றி பெற்றன.
இதில் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்து திமுகவின் நகர செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சாந்தி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை
இன்னிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸார், ஸ்ரீபெரும்புதூர் திமுக நகர செயலாளர் சதீஷ்குமார் மீது புகார் மனு அளித்துள்ளனர்
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
ஸ்ரீபெரும்புதூர் திமுக நகர செயலாளர் சதீஷ்குமார் அவரது மனைவி சாந்தி சதீஷ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து திமுக சார்பாக போட்டியிட்ட 5 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 4 சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் ஒரு அதிமுக கவுன்சிலரை மிரட்டியுள்ளனர். கூட்டணி கட்சி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கவுன்சிலருடன் கலந்து ஆலோசிக்காமல், தான் தலைவராக வேண்டும் என்ற ஆசைக்காக மேற்சொன்ன வெற்றிபெற்ற உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி கூவத்தூர் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.
திமுக நகர செயலாளர் சதீஷ் குமார் அவர்களின் மனைவியை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து 20 நிமிடங்களிலேயே தலைவர் பதவிக்கான தேர்தலை முடித்துவிட்டு அவரைத் தலைவர் என அறிவித்துவிட்டு காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தி விட்டதாக தமிழக முதல்வரிடம் நேரில் தெரிவித்தனர்.
தங்களுடைய புகார் மனு மீது பரிசீலனை செய்து முதலமைச்சரின் கட்டளைப்படி பேரூராட்சி தலைவர் பதவியினை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வாங்கி தரும்படியும் கேட்டுள்ளார்