மாநகராட்சியுடன் இணைப்பால் நூறுநாள் வேலைவாய்ப்பை இழக்கும் கிராமங்கள்
காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் விரிவாக்க கிராமங்கள் இனிவருங்காலங்களில் 100 நாள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
HIGHLIGHTS
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் உடலுழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சி தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சில கிராமங்களை இணைக்கும் சூழ்நிலை உள்ளது.
இதில் 11கிராமங்கள் இணைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் நகராட்சி பெருநகராட்சி ஆக மாறும் போது ஓரிக்கை, தேனம்பாக்கம் மற்றும் செவிலிமேடு பேரூராட்சிகள் இணைக்கப்பட்டது.
இதில் தேனம்பாக்கம் பஞ்சாயத்துககு உட்பட்ட அஞ்சூர் கிராம மக்கள் தங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்க பெருநகராட்சியிலிருந்து தங்கள் ஊராட்சியை விடுவிக்க வேண்டும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மாநகராட்சியாக மாறியுள்ளதால் 11 கிராமங்களை சேர்ந்த சுமார் 1500 நபர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் நூறு நாட்கள் வேலை வாய்ப்பு பொருந்தாது .
இவர்களுக்கு 100 நாள் பணிகள் மூலம் சில ஆயிரங்கள் வாழ்வாதாரத்திற்கு கிடைத்த நிலையில் இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அரசு உள்ளது.