காஞ்சிபுரத்தில் பணி தள பொறுப்பாளர் மாற்றம்: 100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம் கருப்படிதட்டிடை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர்களை மாற்றியதைக் கண்டித்து நூறு நாள் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த கருப்படிதட்டிடை ஊராட்சியில் 450 க்கும் மேற்பட்ட நூறு நாள் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே இருந்த பணி தள பொறுப்பாளர்களான மகேஸ்வரி மற்றும் சித்ரா ஆகியோரை மாற்றி புதியதாக மங்கையர்கரசி, நிர்மலா ஆகிய இருவரை நியமித்துள்ளனர்.
ஆனால் ஏற்கனவே இருந்த இருவருக்கும் 100நாள் முடியாத நிலையில் இவர்களை நியமித்ததை எதிர்த்து நூறு நாள் பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காஞ்சிபுரம் காஞ்சி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து வட்டார வள அலுவலருடன் இணைந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டு கோரிக்கை குறித்து பரீசீலிப்பதாக கூறியதன் பேரில் சமாதானம் கொண்டு சாலை மறியலை கலைத்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த வட்டார வள அலுவலர்கள் பவானி மற்றம் ரேவதி அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பணியாளர்கள் கூறும் நான்கு நபர்களில் இருவரை நியமனம் செய்தாக வாக்குறுதி அளித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.