காஞ்சிபுரத்தில் காவலர் தேர்வில் கலந்து கொண்ட வாலிபருக்கு கால் முறிவு
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில், ஓடும்போது வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை 3000த்திற்கு மேற்பட்ட நபர்களுக்கு காவலர் உடற்தகுதி தேர்வு நேற்று துவங்கியது. நாள்தோறும் 500 நபர்கள் பங்கு பெறுவர்.
இந்நிலையில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருத்தணி தாலுகாவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் பங்கேற்று ஓடிக்கொண்டிருக்கும்போது தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்து அதற்கான சிகிச்சை அளித்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிகழ்வில் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.