ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் பகுதிகளில் குழந்தை இறப்பு அதிகம்
ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு குழந்தை இறப்பு பதிவாகி உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட துணை சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரியாராஜ் வரவேற்று பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை துவக்கி வைத்தனர்.
கூட்டத்தில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரியா ராஜ் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை ஐந்து தாலுகாக்களில், ஐந்து முதன்மை சுகாதார நிலையங்கள் மற்றும் 18 துணை சுகாதார நிலையங்களுடன் இயங்கி வருவதாகவும், கடந்த ஆண்டு ஐந்து தாலுகாக்களை பன்னிரண்டாயிரத்தி நானூத்தி மூணு குழந்தைகள் பிறப்புகளும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2416 குழந்தைகளும் பிறந்துள்ளதாகவும் பிரியா ராஜ் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறப்பு விகிதம் 13.5 சதவீதம் ஆகும். குழந்தைகள் இறப்பு விகிதம் 5.6 சதவீதமாக உள்ளது. கடந்தாண்டு காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 1571, வாலாஜாபாத் 1719, ஸ்ரீபெரும்புதூரில் 2073 , குன்றத்தூரில் 5544 , வாலாஜாபாத்தில் 1496 என 12,403 குழந்தைகள் பிறந்துள்ளது காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2416 குழந்தைகள் பிறந்துள்ளன.
மேலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் தற்போது அதிகரித்துள்ளது வருத்தத்தை அளிப்பதாக பிரியா ராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் பகுதிகளில் அதிகளவு குழந்தை இறப்பு பதிவாகி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடம் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைக்கு ஊட்டச்சத்து உணவு அளிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கு அதிக அளவில் ஊக்கம் அளிப்பதாகவும், ரேஷன் பொருட்கள் மட்டும் அரசு கடையில் வாங்கிவிட்டு, மருத்துவம் தனியாரிடம் செல்வதா என ஆட்சியர் ஆர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதேபோல் உத்திரமேரூர் பகுதியில் இருளர் இன மக்களுக்கு அதிக அளவில் மகப்பேறு குறித்தும் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் கவனம் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.
கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.