சுதந்திர வெள்ளிவிழா தூணை புதிய பள்ளி வளாகத்தில் வைக்க கோரிக்கை
வெள்ளி விழாத்தூணில் அசோக சக்கரம் , தாமரை மயில், புலி உருவ அமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பு முகப்புரை எழுதப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்தது ஆர்ப்பாக்கம் கிராமம். இங்கு பேரறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு தற்போது படிப்படியாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியாக தற்போது செயல்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு, போதிய இடவசதியின்மை காரணமாக, நபார்டு வங்கி உதவியுடன் பள்ளி மைதானத்தில் புதிய இரண்டு அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. பழைய பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பிரார்த்தனை கூட்டம் தினசரி நடைபெறும் நிலையில் அங்கு அப்போது விடுதலைப் பெற்று 25 ஆண்டு வெள்ளி விழா நினைவு கல்தூண் வைக்கப்பட்டது.
அந்த கல்தூணில் தேசிய மலரான தாமரை, தேசியப்பறவையான மயில், தேசிய விலங்கான புலி மற்றும் அசோக சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூணின் மறுபக்கம் இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எழுதப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் தற்போதுள்ள மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பயன்படுத்தப்படாத பழைய பள்ளி வளாகத்தில் உள்ள இத்துணை புதிய பள்ளி வளாகத்தில் நிறுவ வேண்டுமென முன்னாள் மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
தற்போது பழைய பள்ளி வளாகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதால் லாரிகள் முதலான மூட்டைகளை ஏற்றி வரும் போது சேதம் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே கிராம ஊராட்சி மன்றம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று இதனை புதிய பள்ளி வளாகத்தில் அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை வைக்கின்றனர்.