காஞ்சிபுரத்தில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்.பி ஆக உள்ள செல்வம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அவ்வகையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை பிரதான கட்சிகள் துவங்கி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடுடன் நிறைவு பெற்றது.
நேற்று திமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பினை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டார். அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய வழக்கறிஞர் செல்வம் மீண்டும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வம் கடந்த 2014இல் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், மீண்டும் 2019-ல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் , முக்கிய சாலை சந்திப்புகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மின் கோபுர விளக்கு , பொதுமக்கள் பேருந்திற்காக காத்திருக்கும் நிலையில் அனைத்து வசதிகளின் கூடிய நிழற்குடை என பல வகைகளில் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டார்.
அதுமட்டுமில்லாத தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தனது பணிகள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடங்களிலும் அந்த பணிக்கு ஏற்ப திருக்குறளை அந்த இடத்தில் பதிவு செய்வது தவறுவதில்லை.
இது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்த நிலையிலும், தற்போது மீண்டும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு மக்களும் தனக்கு மீண்டும் ஆதரவு தெரிவிப்பார்கள் என தெரிவித்தார்.
வேட்பாளராக அறிவிப்பு செய்த பின் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், காஞ்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து பகுதி நிர்வாகிகளை சந்தித்து மீண்டும் தனக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.