வாலாஜாபாத் அருகே போதிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளின் நெல்களை அரசு கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 30க்கும் மேற்பட்ட இடங்களில் துவக்கியது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை எதையும் வழங்காமலும், போதிய நெல் இருப்பிட வசதிகளை ஏற்படுத்தாமல் இதுபோன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எழுந்ததால் தற்போது பெய்த கன மழையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஆங்காங்கே மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.
வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தார்ப்பாய் மற்றும் குடோன்கள் ஏதும் இல்லாததால் திறந்தவெளியில் முற்று முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக இன்று அதிகாலை முதலே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே லேசான தூறல் மழை பெய்யத் தொடங்கி காலை 9 மணி முதல் கனமழை தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது.
இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி மழையில் நனைவது விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பல காலியாக இருக்கும் நிலையில் இது போன்று கொள்முதல் செய்யப்பட்ட நெல் இங்கு பாதுகாக்கப்பட்டால் அரசு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.