நடிகர் எனக் கூறி காஞ்சிபுரம் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் குண்டர் சட்டத்தில் கைது
சினிமா பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்கை உருவாக்கி மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தமிழ் சினிமா நடிகர் 'கனா தர்ஷனின்' புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி சிலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு friend request அனுப்பி உள்ளனர். அதை அப்பெண் accept செய்தவுடன் நன்றாக பேசி பழகி அப்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணை பெற்று உள்ளனர்.
பிறகு, வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வீடியோகால் பேசி அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை screen shot எடுத்து வைத்துக் கொண்டு அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்ததால் அப்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பகிரப் போவதாக மிரட்டி இரண்டு லட்சத்திற்கும் மேலாக பணத்தை Gpay மூலமாக பெற்று கொண்டுள்ளனர்.
மேலும், பணம் கேட்டு மிரட்டியதாக பாதிக்கப் பட்ட பெண் கொடுத்த ஆன்லைன் புகார் சம்பந்தமாக கடந்த 08.10.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகுமார் மேற்பார்வையில் புலன் விசாரணை செய்த போலீசார் குற்றவழக்கில் ஈடுபட்டதாக ஈரோடு பிபி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அலாவுதீன் (27), அவரது சகோதரர் வாகித் ஆகியோர்களை ஈரோடு சென்று கடந்த 04.02.2023 அன்று போலீசார் கைது செய்தனர்.
அதின் பின் விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்கள் மீது போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இது குறித்து அறிக்கையை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.