காஞ்சிபுரம்: 2ம் நாளாக மாணவ, மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 245 பள்ளிகளில் பயிலும் 15 முதல் 18 வயதுடைய 42 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டத்தில் நாள்தோறும் 5ஆயிரம் மாணவர்களுக்கு செலுத்தப்படுகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில், 15 வயதிலிருந்து 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 245 பள்ளிகளில் 42 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பரிந்துரைக்கபட்ட வயதினருக்கு, நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக (RBSK & MMU) ஒவ்வொரு வட்டாரத்திலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கே சென்று, இன்று இரண்டாம் நாளாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
15 லிருந்து 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோவின்-2.0 வலைதளங்களில் பதிவு செய்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக 2007 அல்லது அதற்கு முந்தைய வருடங்களில் பிறந்த அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள். கோவேக்சின் என்ற தடுப்பூசி மட்டுமே குழந்தைகளுக்கு கொரோனா நோயிலிருந்து நோய்த்தடுப்பாற்றலை அளிக்கும் என இந்திய மருத்துவ கழகம் பரிந்துரைத்துள்ளது.