ஒரு வாக்காளர் கூட இல்லாத இடத்தில் மாதிரி வாக்கு சாவடி மையம் வாகன துவக்க விழா
நடமாடும் மாதிரி வாக்குசாவடி மைய துவக்க விழாவில் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்த கல்லூரி மாணவிகள்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவு மேற்கொள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்காக சில தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் , நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று நடமாடும் மாதிரி வாக்குசாவடி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்ற பின் துவக்கி வைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்ற பின் அதற்கான துண்டு பிரசுரங்களை மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி வாக்களிக்க கோரி கூறினார். அப்போது ஆட்சியர் அங்குள்ள மாணவிகளிடம் வாக்காளர் அடையாள அட்டை எத்தனை பேர் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது குறைந்த எண்ணிக்கையிலேயே கைகளை உயர்த்தி பதிலாக அளித்தனர்.
மாணவிகளிடம் ஏன் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவில்லை என்று கேட்ட போது, தங்கள் வயது 19 எனவும் கடந்த நவம்பரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பதிவு செய்து தற்போது வரை வாக்காளர் அடையாள அட்டை எங்களுக்கு கிடைக்கவில்லை என பதில் கூறியதை கேட்டு ஆட்சியர் அதிர்ந்தார்.
உடனடியாக இது குறித்து அருகில் இருந்த அலுவலரிடம் தெரிவித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மாதிரி வாக்கு செலுத்த கூட ஓரு சில மாணவிகளை தவிர வாக்காளர் இல்லை என்பது அறிந்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து சென்றார்.