காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
காஞ்சிபுரத்தில், காவலர் ஒருவருடன் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை, சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த, காவலராக பணிபுரிந்து வரும் ஒரு நபருக்கு , அதேபகுதியை சேர்ந்த 18 வயதுக்கு குறைவான பெண்ணுடன் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.
நேற்றிரவில் இருந்து திருமண பணிகள், மண்டபத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலருக்கு, தொலைபேசியில் குழந்தை திருமணம் குறித்த தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வந்த சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு மைய அலுவலர்கள், திருமண பெண்ணின் வயது குறித்த சான்று ஆவணங்களை கேட்டபோது, இன்னும் ஒரு மாதத்திற்கு பின்பு, 18 வயது நிறைவு பெற இருப்பதாக கூறினர்.
எனினும், தற்போது சட்டப்படி திருமணம் நடத்த இயலாது எனக்கூறிய அதிகாரிகள், இளம்பெண்ணை செங்கல்பட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து, மணமகனிடம் சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் ஒருவரே சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணத்தில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.