ஆவின் வாகனம் என கூறி சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை திருடியவர்கள் கைது
சுங்குவார்சத்திரம் அருகே ஆவின் வாகனத்தில் பால் விற்பனை செய்வது போல் மாடுகளை திருடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எச்சூர் கூட்ரோடு அருகே இன்று அதிகாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் ரோட்டின் ஓரமாக படுத்துக் கொண்டிருக்கும் மாடுகளை திருட முயற்சித்த போது காவலர்களைப் பார்த்து அங்கிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த வாகனங்களில் தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிறு மாங்காடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது மாடுகளை இரவிலிருந்து காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது கட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆவின் வாகனத்தில் பால் விற்பனை செய்வது போல் மாடுகளை திருடுவதாக ரகசிய தகவல் காவல் துறைக்கு கிடைத்தது.
இதையடுத்து கட்டவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வ/25, தீபக் வ/25, ராம்கி வ/34, வயது 26 விக்னேஷ் வ/26 ஆகியோரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திவந்த ஆவின்பால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.