கூடுதல் ஒன்றிய தலைவர் பதவி வர வாய்ப்பு உள்ளது :எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளில் கூடுதல் ஒன்றிய தலைவர் பதவி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காஞ்சிபுரம் , உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் காஞ்சி மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர் தங்கம் தென்னரசு தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , கடந்த 4 மாதங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி உள்ளார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலவாக்கம் மற்றும் வாலாஜாபாத் 2 என புதிய ஒன்றியங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளதால் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்
குறிப்பாக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெறும் நிலையில் புதிதாக உருவாகும் ஒன்றிய அலுவலகங்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அனைவரும் நாமாக இருப்பின் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் எனவும்,
கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றது போல் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்று திமுக தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.