தியாகதுருகம் அருகே வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஶ்ரீதர்
தியாகதுருகம் ஒன்றியத்தில் நடபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
கள்ளகுறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் மற்றும் கனங்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டம் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என் .ஸ்ரீதர் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சாத்தனூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 3 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் சாத்தனூர் முதல் கனங்கூர் வரை நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் குறும்பாலங்கள் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பின்னர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூபாய் 6.72 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணி நடைபெறுவதையும் நடுத்தெருவில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் .
தொடர்ந்து, கனங்கூர் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 7.42 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 10.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமுதாய குடிநீர் கிணற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 3.26 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்ல வீடுகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகள் நிறைவு பெற்ற பயனாளிகளுக்கு பட்டியல் தொகையினை வழங்கிட மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. செந்தில், முருகன், திருமதி. இந்திராணி ஒன்றிய உதவி பொறியாளர் திரு .விஜயன், மற்றும் திரு .ஜெயப்பிரகாஷ் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.