வக்பு வாரியத்தின் ரூ 500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சொத்துகளை வக்பு வாரியத்திற்கு கட்டுப்பட்ட மாஸ்க் தர்ஹா நிர்வாகிகளிடம் உரிய ஆவணங்களுடன் நீதிமன்ற அமீனா ஒப்படைத்தார்
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் ரூ. 500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் நகரின் மத்தியில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில்அரண்மனை குளம் உள்ளது.இந்த குளம் அரசு ஆவணங்களில் அரசு புறம்போக்கு நிலம் என பதிவாகிஇருந்ததை எதிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மாஸ்க்தர்கா நிர்வாகத்துக்கும் இடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வந்தது.
பின்னர், இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்கு நடந்தது. விசாரணையின் முடிவில், வக்பு வாரியத்துக்கு கட்டுப்பட்ட மாஸ்க் தர்ஹா நிர்வாகத்துக்கு சொந்தமான நிலம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், அரண்மனை குளம் அருகே உள்ள 18,385 சதுர அடி நிலத்தின் உரிமை தொடர்பாக, திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் சார்பில் மத்திய அரசுக்கும், மாஸ்க் தர்ஹா நிர்வாகத்துக்கும் இடையே நடைபெற்ற மற்றொரு வழக்கிலும் மாஸ்க் தர்ஹா நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்புடன் இன்று (4.9.2021) ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மேற்படி சொத்துகளை வக்பு வாரியத்திற்கு கட்டுப்பட்ட மாஸ்க் தர்ஹா நிர்வாகிகளிடம் உரிய ஆவணங்களுடன் நீதிமன்ற அமீனா ஒப்படைத்தார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 500 கோடியாகும். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது..