குழந்தை ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கட்டாயம்: தர்மபுரி கலெக்டர்
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கட்டாயம் வழங்க வேண்டும் கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட காவல்துறை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி இன்று தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், தரமபுரி ஊராட்சி ஒன்றியம், காவல்துறை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று (13.09.2021) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தலைமையேற்று அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுஇத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 4.88 இலட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இன்று (13.09.2021) முதல் 27.09.2021 வரை இந்த தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 1333 அங்கன்வாடி மையங்கள், 231 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 225 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1840 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.
இம்முகாம்களில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5.17 இலட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த ஆண்டு தேசிய இரத்த சோகை தடுப்பூசி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவடத்தில் உள்ள 20 வயது முதல் 30 வரை உள்ள சுமார் 1.22 இலட்சம் பெண்களுக்கு இரத்த சோகை நோய் தடுப்பதற்காக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடு, படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்த சோகை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பென்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே தமிழக அரசு இந்த சிறப்பு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை செயல்படுத்தி வருகின்றது.
அதன்படி குடற்புழு நீக்க மாத்திரைகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200mg அளவு கொண்ட அரை மாத்திரையும் (அரை மாத்திரையும்), 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 400மிகி அளவு கொண்ட ஒரு மாத்திரையும் (1 மாத்திரையும்) வழங்கப்படுகின்றது.
இந்த முகாம்களுக்கு தேவையான அளவு குடற்புழு நீக்க மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுலவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தர்மபுரி மாவட்டத்தில் இம்முகாம்கள் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கட்டாயம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சரஸ்குமார், தர்மபுரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீசுகந்த பிரியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.