செங்கல்பட்டு ரப்பர் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி, இரவில் பொதுமக்கள் முற்றுகை
செங்கல்பட்டு அருகே மாசு ஏற்படுத்தும் ரப்பர் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி, இரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தனியார் ரப்பர் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு பழைய ரப்பர் பொருட்களை பயன்படுத்தி, மூலப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
அதனை, பல்வேறு டயர் கம்பெனிகளுக்கு அனுப்புகின்றனர். இங்கு, ரப்பர்களை உருக்கி, மூலப் பொருட்கள் தயாரிக்கும்போது, அதில் இருந்து வெளியேறும் நச்சுக் காற்று, அருகில் உள்ள பகுதிகளில் பரவி மாசு ஏற்படுத்துகிறது.
இதனால் பொதுமக்களுக்கும். சிறுவர்களுக்கும் மூச்சு திணறல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், இந்த தொழிற்சாலையை, குடியிருப்பு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பல முறை தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடமும், அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், திம்மாவரம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று இரவு 10 மணியளவில் தனியார் ரப்பர் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
உடனடியாக, அந்த தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த தாலுக்கா காவல்துறையினர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து களைந்துசென்றனர்.