அரியலூர் மாவட்ட விவசாயிகளுடன் மு.க. ஸ்டாலின் காணொலியில் கலந்துரையாடல்
அரியலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முக ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலமாக இன்று தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னை தலைமையிடத்திலிருந்து 1,00,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற விவசாய பெருங்குடி மக்களுடன் கலந்துரையாடினார்.
அதன்படி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் 1,00,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகளுடன் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா காணொலிக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மின் பகிர்மான உபகோட்டத்தில் 242 விவசாய மின் இணைப்புகளும், திருமானூர் மின் பகிர்மான உபகோட்டத்தில் 475 விவசாய மின் இணைப்புகளும், செந்துறை மின் பகிர்மான உபகோட்டத்தில் 135 விவசாய மின் இணைப்புகளும், ஜெயங்கொண்டம் மின் பகிர்மான உபகோட்டத்தில் (டவுன்) 242 விவசாய மின் இணைப்புகளும், ஜெயங்கொண்டம் மின் பகிர்மான உபகோட்டத்தில் (கிராமம்) 459 விவசாய மின் இணைப்புகளும், ஆண்டிமடம் மின் பகிர்மான உபகோட்டத்தில் 321 விவசாய மின் இணைப்புகளும் என மொத்தம் 1874 விவசாய மின் இணைப்புகள் பெற்ற விவசாயிகள் காணொலிக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் மார்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
பொதுமக்கள் தாங்கள் அன்றாட பயன்படுத்தக் கூடிய மின்சாரம், தண்ணீர் ஆகியவைகளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், தங்கள் வீடுகளில் மின் இணைப்பிற்கு வரும் மின்சார கம்பிகளில் உரசாமல் அதற்கு கீழ் உள்ள மரக்கிளைகளை குறைந்த பட்சம் 4 அடி இடைவெளி விட்டு கழித்து விட வேண்டும். பொதுமக்கள் இதுபோன்ற நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மேற்பார்வைப் பொறியாளர்கள் திஅம்பிகா, செல்வராசு, செயற்பொறியாளர்கள் சேகர், அய்யனார், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.