அரியலூர்: தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்த கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) - சுகாதார ஊக்குநர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்கள், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தூய்மை பாரத இயக்க சுகாதார ஊக்குநர்கள் ஆகியோர்களுக்கு, கிராம ஊராட்சிகளை தூய்மையாக பராமரித்தல் மற்றும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தொடர்ந்து தக்க வைப்பது குறித்து, பணியாளர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து மாவட்ட கலெக்டரால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசால் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான வீடு கட்டுதல், தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் விநியோகம், சுகாதாரம், வடிகால் வசதி, சாலை வசதி மற்றும் இதர பிற நலத்திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்த, பணியாளர்கள் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி திட்ட செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.