அரியலூர் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
அரியலூர் நகரத்தில் நகராட்சி மூலம் பொது சுகாதாரப் பணி செய்யும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தீர்வு காண்பதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை கையாண்டு வந்த நிலையில், வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் ஏ.ஐ.டி.யு.சி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.
திருச்சியில் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிலாளர் துணை ஆணையர் ஆலோசனைக்கு இணங்க கோரிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவதாக நகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டவாறு, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 27 மாதத்திற்கான மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளத்திற்கான அரியர்ஸ் கொடுக்கப்படவில்லை .
நிரந்தரத் தொழிலாளிக்கு 2009ஆம் ஆண்டிலிருந்து சேமநலநிதி வட்டியுடன் கூடிய இருப்பு கணக்கு கொடுக்கப்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர்
களுக்கு சேமநல நிதி இருப்பு கணக்கு கொடுக்கப்படாதவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. தெற்கு பெரியதெரு காலனி குடியிருப்பில் வீடு கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கை இல்லை. மற்றும் எல்.ஐ.சி. சொசைட்டி கடன் உட்பட பிடித்தம் செய்யும் பணத்தை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு செலுத்தப்படாத நிலை இருக்கிறது. ஒப்பந்த தொழிலாளிக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ அட்டை கொடுக்கப்படவில்லை. அடையாள அட்டை கொடுக்கப்படவில்லை.
மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணப் பயன்கள் ,வாரிசு வேலை கொடுப்பதில் காலம் கடத்தாமல் உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அரியலூர் நகராட்சி புதிய அலுவலகம் முன்பு துப்புரவுத் தொழிலாளிகளின் ஆர்ப்பாட்டம் செயலாளர் எஸ். மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
சங்க நிர்வாகிகள் நாகூரான், சிவஞானம், விஜி, கிருஷ்ணம்மாள் ஆகியோர் பேசினர். நிறைவாக சங்கத் தலைவரும் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில நிர்வாக குழு உறுப்பினருமான டி.தண்டபாணி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மெத்தனப் போக்கு நீடிக்குமானால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சுகாதார தொழிலாளர்கள் ஈடுபட வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடும் என்பதை எச்சரிக்கையுடன் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.