அரியலூர் மாவட்டத்தில் 29 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் அபாயம்
அரியலூர் மாவட்டத்தில் 29 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
HIGHLIGHTS
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தாவது:-
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையின்போது 29 பதற்றமான பகுதிகள், நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்குழுவினர்களுடன் இணைந்து புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பணியாற்றும் வகையில் நீச்சல், பாம்பு பிடிப்பவர் உள்ளிட்ட பிரிவுகளில் திறமைவாய்ந்தவர்களாக 73 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பொதுவிநியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் இப்பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பாம்பு மற்றும் விஷக்கடி மருந்துகள் தயார் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இருந்திட வேண்டும்.
மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி, ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட், போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்திட உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்திட வேண்டும்.
பேரிடர் மீட்பு பணிக்காக வரும் தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு மற்றும் மத்தியக்குழு ஆகிய குழுக்களுக்கு தேவையான வசதிகளை செய்திட வேண்டும்.
குறிப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் இம்மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொள்பவர்களை மீட்பதற்கு முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னூலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை)சு.சுந்தர்ராஜன், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், முதல் நிலை மீட்பாளர்கள் கலந்து கொண்டனர்.