மணல் திருடிய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றியுள்ள கொள்ளிடம் ஆற்று படுகைகளில் மணல் திருடிய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றியுள்ள கொள்ளிடம் ஆற்று படுகைகளில் மணல் திருடிய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அருள்மொழி, கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மாட்டுவண்டிகளை மறித்து சோதனை செய்ய முயன்றனர். அப்போது 3 மாட்டுவண்டிகளை ஓட்டி வந்தவர்கள் கார்குடி ஏரி ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து அள்ளி வரப்பட்ட மணல் இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், அருள்மொழி கிராம நிர்வாக அலுவலர் சோதனை செய்ததில், 7 மாட்டுவண்டிகளை ஓட்டி வந்தவர்கள் வண்டிகளை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தா.பழூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் 10 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு, வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.