ஓட்டுக்கு வாங்காத துட்டு- மாணவிகள் விழிப்புணர்வு
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அரியலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெட்ரோல் போட வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையம் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஐ முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெட்ரோல் போட வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
மேலும் பெட்ரோல் போட வந்த பொதுமக்களின் வாகனங்களில் 100 சதவீதம் வாக்களிப்போம், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்பதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு வழங்கினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், தாசில்தார் ராஜமூர்த்தி (அரியலூர்), பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, பள்ளி தலைமையாசிரியர் இசபெல்லாமேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.