ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு: நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக கலெக்டர் கூறினார்.

Update: 2023-01-25 11:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக கலெக்டர் கூறினார்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு குடிமகனின் ஓட்டிற்கும், இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் உரிமையும், வலிமையும் உண்டு என்கிறது தேர்தல் கமிஷன். இதையொட்டி, ஜன. 25ல், அனைவருக்கும் ஓட்டளிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய வாக்காளர் தினம் அறிவிக்கப்பட்டது.

ஓட்டுரிமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரையும் ஓட்டுப்போட வைக்கும் நோக்கில், தேசிய அளவில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆதார் எண்ணை, வாக்காளர் எண்ணுடன், வாக்காளர் உதவி மைய செயலி மூலம், ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணியை சிறப்பாக செய்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட, தேர்தல் விழிப்புணர்வு நாடகங்கள், வாக்காளர் விழிப்புணர்வு பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், ஓவியப் போட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்ட, 52 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ. மணிமேகலை, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, சிஇஓ மகேஸ்வரி, மாவட்ட மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில், திரளான அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Tags:    

Similar News