மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய 3பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் எஸ்ஐ குமார் மற்றும் போலீசார், பொத்தனூர் காவிரி ஆற்றுப் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 3 பேரும் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு மணல் மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்