கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது

எலச்சிபாளையம் அருகே கூட்டுறவ சங்கத்தில், வசூல் செய்த பணத்தை வரவு வைக்காமல் ரூ. 1.17 கோடி மோசடி செய்த சங்க செயலாளர் மற்றும் எழுத்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-28 02:30 GMT

ரூ. 1.17 மோசடி செய்ததாக, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்க செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி.

எலச்சிபாளையம் அருகே கூட்டுறவ சங்கத்தில், வசூல் செய்த பணத்தை வரவு வைக்காமல் ரூ. 1.17 கோடி மோசடி செய்த சங்க செயலாளர் மற்றும் எழுத்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.கோக்கலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு, பயிர்க் கடன், நகைக் கடன், மத்தியகால கடன், மாற்றுத்திறனாளி கடன், டெபாசிட் மீதான கடன், உரம் விற்பனை மற்றும் உறுப்பினர்களிடம் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறைக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உத்தரவின் பேரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, ரூ.1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 பணம் வசூல் செய்து சம்மந்தப்பட்ட கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைதூஞூ தொடர்ந்து திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளர் கிருஷ்ணன், இந்த முறைகேடு குறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்.கோக்கலை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அ. பெரியசாமி (வயது56), எழுத்தர் சி.பெரியசாமி (58) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தில் மோசடி சம்பவம் சங்க உறுப்பினர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News