நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ப.வேலூர் அருகே நாயைக் கல்லால் அடித்த கல்லூரி பேராசிரியரை, திருப்பி தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ராஜ்குமார். அவர் பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை துரைராஜ் கறவை மாடுகள் வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். அந்த மாடுகளுக்கு நன்செய் இடையாறு பகுதியில் உள்ள சில வீடுகளில் மீதமாகும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய தண்ணீரை சேகரித்து வழங்கி வந்தனர்.
இந்த தண்ணீரை சேகரிப்பதற்காக ராஜ்குமார் அவரது வீட்டிற்கு அடுத்த வீதியில் சென்று கொண்டிருக்கும் போது அவரை ஒரு நாய் துரத்தியதாக தெரிகிறது. அதனைக்கண்ட ராஜ்குமார் அந்த நாயை துரத்தி கல்லை வீசி தாக்கி உள்ளார். இதனைக் கண்ட நாயின் உரிமையாளர் யோகேஷ் தங்களின் வளர்ப்பு நாயை கல்லால் தாக்கியதாக ராஜ்குமாரை தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த யோகேஷின் தந்தை சிவபாலன் சகோதரர் கோகுலேஷ் ஆகியோரும் தங்களின் நாயை கல்லால் தாக்கியதாக ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்றபோது ராஜ்குமாரின் தந்தை துரைராஜையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ராஜ்குமார் மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், இதனை கண்டித்து நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜ்குமாரை தாக்கிய தந்தை மகன்கள் ஆகிய 3 பேரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ப.வேலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மட்டும் இருந்ததால் அவர்கள் அனைவரும் போலீஸ் நிலையம் முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவல் அறிந்து போலீஸ் நிலையத்திற்கு வந்த டிஎஸ்பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர், அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.