போலி இரிடியம் விற்க முயன்ற 11 பேர் கைது
விருதுநகரில் இரிடியம் என்று கூறி போலி உலோகத்தை விற்க விடுதியில் தங்கியிருந்த 11 நபர்கள் கைது செய்யபட்டனர்.
விருதுநகர் சிவகாசி செல்லும் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இரிடியம் விற்பனை செய்பவர்கள் தங்கி இருந்ததாக விருதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்ற போது காரில் ஏறி அவர்கள் தப்ப முயன்றனர்.அவர்களை பிடித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்கள் பெட்டி ஒன்றில் உலோகத்தை உருக்கி வைத்திருந்தனர்.உலோகத்தின் உண்மை தன்மையை கண்டறிய தடய அறிவியல் துறை நிபுணர்களை கொண்டு சோதனையிட்டனர். சோதனையில் அது போலி இரிடியம் என தெரிந்தது.
இது தொடர்பாக பெங்களூர், ஹைதராபாத், நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ராம்பிரசாத், கணேஷ், பொன்னரசு, ஜோசப் கென்னடி, கருப்பசாமி, கருப்பையா, வினோஜ், சதீஸ் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4 சொகுசு கார் மற்றும் 3 கிலோ போலி இரிடியம் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் 1 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஆனால் அந்த நபரை நேரடியாக தங்களுக்கு தெரியாது என்றும் தரகர் ஒருவர் மூலமாக விற்பனை செய்ய இருந்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் கூறினர்.ஆமத்தூர் போலீசார் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.