திருவண்ணாமலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
திருவண்ணாமலை வட வீதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை வட வீதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருவதாலும், சஷ்டி விரதம் நிறைவையொட்டியும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு வட வீதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள முருகர் அருணகிரியாருக்கு காட்சியளித்த சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பூமாலை அலங்காரத்துடன் உண்ணாமலை அம்மன் சன்னதியில் வேல் எடுத்து சின்னக்கடை வீதியில் உள்ள வட வீதி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 13ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கிய நாள் முதல் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் காலை மற்றும் மாலை வேலைகளில் மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வில்வாரணி ஸ்ரீ தண்டபாணி சுவாமி திருக்கோயில், சோமாசிப்பாடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆரணி முருகர் கோயில், சேத்துப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆகிய பகுதிகளில் கந்த சஷ்டி விழாவின் நிறைவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்வில் அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.