மகளிர் சுய உதவி குழுக்கள் பொதுக்குழு கூட்டம்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாடுகள் குறித்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடு குறித்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, துரிஞ்சாபுரம், தெள்ளார், வந்தவாசி ஆகிய 6 வட்டாரங்களில் 308 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டம் குறித்து மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடு குறித்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களான கீழ்பென்னாத்தூர் வாழ்ந்து காட்டுவோம் மணிலா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் , வந்தவாசி ஆராமுது உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மற்றும் கலசபாக்கம் வாழ்ந்து காட்டுவோம் மணிலா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்திற்கான துவக்க நிதி மற்றும் வணிக விரிவாக்க நிதியாக மாவட்ட கலெக்டரால் சம்மந்தப்பட்ட உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட கைவினை பொருட்கள், எண்ணெய், கற்சிற்பங்கள், பாரம்பரிய சிறுதானியங்கள் மற்றும் பல்வேறு வியாபார விற்பனை பொருட்களை பார்வையிட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் முருகேஷ் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சையத் சுலைமான், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சங்கர், அரசு, கவுஸ், ராஜசேகரன், இளம் வல்லுநர்கள் மணிகண்டன், ரஞ்சித்குமார், வட்டார பணியாளர்கள் மற்றும் மகளிர் வாழ்வாதார சேவை மைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.