இந்துக்களுக்கும் ஆன்மீகப் பெருமக்களுக்கும் நெருக்கமான அரசு திமுக: அமைச்சர் எ.வ.வேலு
இந்துக்களுக்கும், ஆன்மீக பெருமக்களுக்கும் மிக நெருக்கமான அரசு திமுக அரசு என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு செல்ல ஏற்கனவே உள்ள சாலை அதிக நேரம் பிடிப்பதால் முதல்வர் ஆணைப்படி திருவண்ணாமலையிலிருந்து தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு குறைந்த நேரத்தில் விரைவாக கடந்து செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இதற்கான ஆய்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனையயடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறும்.
தற்போது உள்ள மக்கள் தொகை, போக்குவரத்து அடிப்படையில் சாலை விரிவாக்கம் என்பது அத்தியாவசியமாக உள்ளது. சாலை விரிவாக்கத்தின் போது மரம் வெட்டுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நடுவது நெடுஞ்சாலைத் துறையின் நோக்கம்.
மேலும் ஒரு மாபெரும் கொரோனா தொற்றினால் வாரத்தில் மூன்று நாட்கள் திருக்கோயில்கள் அனைத்தும் மூடப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில், நோய் பரவாமல் தடுப்பது அரசின் கடமையாகும். அரசியல் செய்வதற்காக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார். இந்துக்களுக்கும், ஆன்மீக பெருமக்களுக்கும் மிக நெருக்கமான அரசு இந்த திமுக அரசுதான் என கூறினார்.
திமுக மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.