அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோவில் திருத்தேர் வெள்ளோட்டம்
பாளையங்கோட்டை அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலில் நூதன திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நெல்லை பாளையங்கோட்டை இராஜகோபாலசுவாமி கோயிலில் தேர் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக பிரம்மோஸ்தவத்தில் தேர் ஓடவில்லை. இதையடுத்து பக்தர்கள் புதிய தேர் செய்ய கோரிக்கை வைத்து வந்த நிலையில், இதற்கான கடந்த 2020 ஆம் ஆண்டு பூர்வாங்க பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு ரூ 55 லட்சம் மதிப்பில் 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் செய்யப்பட்டது. 5 அடுக்கு வேலைப்பாடுகளுடன் திருத்தோ் பணி முடிவடைந்தது.
அடுத்து வரும் பங்குனி பிரமோற்சவத்தில் தேர் வலம் வரும் வகையில் தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை மகா சங்கல்பம் விஷ்வக்ஷேன ஆராதனை கும்ப ஸ்தாபனம், கலச திருவாராதனம், மகா பூர்ணாஹுதி நடைபெற்றது . இன்று அதிகாலையில் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப முடிந்ததும், ஹோமங்கள் தொடா்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. திருவோண நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய மேஷ லக்னத்தில் காலை 9.47மணிக்கு நூதன திருத்தேர் வடம் பிடித்து வெள்ளோட்டம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று தேர் ஆவாஹனம் மற்றும் திருவாராதனம் நடைபெற்றது. ஆன்மீகப் பெருமக்கள் திரளாக கலந்துகொண்டு ராஜகோபாலன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் வெள்ளோட்டம் முடிந்ததும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஸ்ரீ கோபாலன் கைங்கர்ய சபா மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினா் செய்திருந்தனா்.