தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்திட நல்வாய்ப்பு :ஆட்சியர் தகவல்
தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயனடைய இணையதள முகவரியில் பதிவு செய்து இணைந்திடலாம்.
HIGHLIGHTS
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தகவல் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மே 23ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கிராமங்களில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், வேளாண்மையில் மகசூல் பெருக்கம் அடைந்திடவும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது. மேலும் தொகுப்பு தரிசு நிலங்களில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தி, மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்த நீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட திட்டத்தில் வழிவகை உள்ளது. நடப்பு ஆண்டில் இத்திட்டம் 3.204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக, தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு கைபேசியில் உழவன் செயலியில் தாங்களளாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவேற்றம் செய்த விபரங்களை துறை அலுவலர்கள் தொகுப்பு தரிசு நிலத்தினை நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள், ஆகவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் மேலும் இத்துறையின் நலத்திட்டங்களில் பயனடைய https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/scheme-register என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இணைந்திடலாம். மேலும் கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பபடுகிறது.